அடி மேல் அடி வைத்து, திட்டமிட்டு அரசியலுக்கு வந்த திரையுலக நட்சத்திரமாக இருந்தாலும் சரி... அண்மையில் திடீரென குதிக்கும் நட்சத்திரமாக இருந்தாலும் சரி... அவர்கள் நடத்தும் கூட்டத்துக்கு மக்கள் கூட்டம் அலைமோதுவதைப் பார்க்கிறோம்... பிரமிக்கிறோம்! நாம் மட்டுமா... யாருக்காக வந்திருக்கிறார்களோ அந்த நட்சத்திரங்களும் கூட!
நாமும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். போல முதல்வராகலாம் என்கிற கனவு அவர்களுக்கெல்லாம் இல்லாமல் இராது.
இந்தத் தருணத்தில், அதாவது டிசம்பர் 24- எம்.ஜி.ஆர். நினைவு தினத்தில், ஒரு விஷயத்தை நினைவுகூறுவதோடு, சுட்டிக்காட்டுவதும் சாலப் பொறுந்தும்.
அது, அரசியலுக்கு வரும் சினிமா நட்சத்திரங்கள் பற்றியதே!
ஜனநாயக நாட்டில் எவர் வேண்டுமானாலும் பதவியில் அமர்ந்து ஆட்சி செய்ய முடியும் என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தைப் பொறுத்தமட்டில் அரசியலில் ஈடுபடும், ஈடுபடுத்தப்படும் சினிமா நட்சத்திரங்களில் எண்ணிக்கை வெகுவாகனது.
சினிமா நடிகர் அல்லது நடிகையை பேட்டியெடுக்கச் செல்லும் நிருபர்கள் சிலர், 'நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?' என்ற கேள்வியை தவிர்த்தாலே... பலருக்கும் அரசியல் எண்ணம் குறையும் என்பது நையாண்டியாளர்களின் கருத்து!
அரசியலுக்கு வரும் நட்சத்திரங்களில் பலரும் மேடையில் முதலில் உதிர்க்கும் சொல் 'புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வழியில்...'
இதில், தவறேதும் இல்லை..!
ஆனால், எம்.ஜி.ஆர். பின்பற்றிய கொள்கைகளை பின்பற்றாமல் போனாலும் கூட அடிப்படையான ஒரு விஷயத்தைப் பின்பற்றினாலே, அடுத்தடுத்து சமூக வாழ்வில் தேர்ச்சி வந்துவிடக்கூடும்.
அதுதான் மனித நேயம்... எம்.ஜி.ஆரின் ஒவ்வொரு அசைவுகளிலும், புரிகின்ற ஒவ்வொரு காரியங்களிலும், அமல்படுத்தப்படும் ஒவ்வொரு திட்டங்களிலும் மனிதே நேயம் என்பது பெரும் பங்காற்றிக் கொண்டிருக்கும்.
ஓர் அரசியல் தலைவருக்கு வேண்டியும் முழுமுதற் தகுதியே மனித நேயம் என்பது.
இந்தத் தகுதி இருந்ததால் தான் எம்.ஜி.ஆரால் மீண்டும் மீண்டும் தமிழக முதல்வராக முடிந்தது. இல்லையேல், இரண்டாவது முறை அவரை மக்கள் முதல்வராக்கியிருக்க மாட்டார்கள்.
வசீகரம் வெறும் முகவரியே... மனிதத்துடன் கூடிய ஆட்சியே மக்களுக்கு வேண்டியது!
Article from : http://www.nigazhvugal.com/index.php?option=com_content&view=article&id=580:2008-12-23-19-37-45&catid=18:manitham&Itemid=24

No comments:
Post a Comment