இது ஒரு ஜப்பானிய கதை. அநுராகம் வெளியீட்டில் வந்த கதையை விழுது பத்திரிகையில் வெளியிட்டு இருந்தோம். எழுத்தாளர்.கி.ராஜநாராயணன் இந்தக் கதையை படித்து, மிகவும் சிலாகித்துப் பாராட்டினார்.
நீண்ட நெடுங்காலத்துக்கு முன்னர் இப்படி ஒரு சட்டம் இருந்ததாகக் கூறுகிறார்கள். வேலை செய்ய முடியாத வயதான கிழவர்களை தூக்கிக் கொண்டு போய் மலைப்பகுதிகளில் விட்டுவிட்டு வந்துவிட வேண்டும். இந்தச் சட்டம் அமலில் இருந்த காலத்தில் நடந்த கதை இது.
தந்தை மீது மிகுந்த பாசம் கொண்ட மகன் தந்தைக்கு மிக மிக வயதாகி தள்ளாமை வந்து விட்ட போது மலையில் கொண்டு போய் விட்டுவிட வேண்டிய நேரம் வந்தது. மகனுக்கோ அதில் விருப்பம் இல்லை. ஆனால் அப்படிச் செய்யாவிட்டால் அரச தண்டனை கிடைக்கும். என்ன செய்வது. தந்தையை முதுகில் சுமந்து கொண்டு போனான். இறக்கிவிட வேண்டிய இடம் வந்தது. மனம் உருகியது. தந்தை இங்கே தனியே தவித்து மடிவதா? அவனால் அதை எண்ணிக்கூட பார்க்க முடியவில்லை. அவரைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்கே திரும்பி வந்து விட்டான்.
வீட்டின் பின்பகுதியில் குகை போன்ற ஒரு இடத்தை உண்டாக்கி, அதில் யாருக்கும் தெரியாமல் தந்தையை இருக்கச் செய்தான். தினமும் அங்கே உணவைக் கொண்டு போய் கொடுத்து வந்தான்.
ஒருசமயம் மன்னன் ஒரு விசித்திரமான ஆணையிட்டான். பிரஜைகள் ஒவ்வொருவரும் சாம்பலான கயிறு ஒன்றை திரித்துக்கொண்டு வரவேண்டும் என்பதுதான் அது. யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. இதைப்பற்றி கேள்விப்பட்ட தந்தை மகனிடம் அதற்கு ஒரு வழி சொன்னார். மகன் அதன்படியே செய்து மன்னனிடம் பாராட்டுப் பெற்றான்.
மற்றொரு சமயம் மன்னன் ஒரு மரக்கொம்பை கொடுத்து அதன் வேர் பாகம் எது? தலை பாகம் எது? என்று கேட்டான். யாராலும் சொல்ல முடியவில்லை. மகன் தந்தையிடம் வந்து கேட்டான். அதற்கும் அவர் ஒரு வழி சொன்னார். இந்த தடவையும் மன்னனின் பாராட்டைப் பெற்றான்.
பிறகு சில காலம் கழித்து மன்னன் ஒரு கடினமான பிரச்சினையைக் கூறினான். அடிக்காமலேயே ஒலிக்கக் கூடிய மேளம் ஒன்றைச் செய்து தர வேண்டும் என்றான். இந்த முறையும் யாருக்கும் எந்த யோசனையும் வரவில்லை. மீண்டும் மகன் தந்தையிடம் சென்றான். தந்தை அதற்கும் வழி சொன்னார்.
வியப்படைந்த மன்னன் “உன்னால் எப்படி இந்த மூன்று பிரச்சினைகளுக்கும் விடைகாண முடிந்தது” என்று கேட்டான்.
“நான் வயதில் மிகவும் இளையவன். அனுபவமும் இல்லாதவன். இந்த பிரச்சினகளுக்கு விடை தெரியாதவன்.” என்று சொல்லி, தன் தந்தை தன்னுடன் இருக்கும் உண்மையைக் கூறி கண்ணீர் விட்டான்.
மன்னனின் மனம் நெகிழ்ந்தது. “இனி வயதானவர்களை மலைக்குக் கொண்டு போய் விட வேண்டியதில்லை” என்ற் உத்தரவிட்டான்.
அதுமுதல் வய்தானவர்கள் தங்கள் கடைசி நாட்களைத் தங்கள் பிள்ளைகளுடனே மகிழ்ச்சியோடு கழித்தனர். இப்படியாக கதை முடிந்தது.
வயதானவர்கள் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனரா என்ற கேள்வியுடன் இன்றும் கதை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது......
சரி...மூன்று பிரச்சினைகளுக்கும் அந்த தந்தை என்ன வழிகள் சொன்னார் என்று உங்களால் யோசிக்க முடிகிறதா..! இல்லையென்றால் வயதான மக்களிடம் கேட்டு வாருங்கள்..!
Article from : http://mathavaraj.blogspot.com/2009/04/blog-post_9760.html

No comments:
Post a Comment